சினிமா செய்திகள்

‘டோரதி’ படம் : இளையராஜாவின் குரலில் வெளியான ‘முத்துமணி’ பாடல்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘டோரதி’ படத்தின் இரண்டாவது பாடலான ‘முத்துமணி’ பாடலை இசையமைப்பாளர் இளையராஜா எழுதி பாடியுள்ளார்.

10-வது படத்தில் புதிய கூட்டணி

'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி', 'பேட்ட', 'மகான்', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'ரெட்ரோ' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது 10-வது திரைப்படமாக 'டோரதி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இது இளையராஜாவின் திரையுலகப் பயணத்தில் 1540-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக முழு படத்திற்கு இளையராஜா இசை

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 9 படங்களில், 'பேட்ட' திரைப்படத்திற்கு மட்டும் அனிருத் இசையமைத்திருந்தார். மற்ற அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அதே நேரத்தில், தனது படங்களில் இளையராஜாவின் பாடல்கள் அல்லது பின்னணி இசையை முக்கிய காட்சிகளில் பயன்படுத்துவதை கார்த்திக் சுப்பராஜ் வழக்கமாகக் கொண்டிருந்தார். தற்போது முதன்முறையாக, முழு திரைப்படத்திற்கும் இளையராஜாவையே இசையமைக்க வைத்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

செப்டம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ்

‘டோரதி’ திரைப்படம், செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் - இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

சமீபத்தில் இந்த படத்திலிருந்து முதல் பாடலான ‘கல்யாண விருந்து’ வெளியாகி வைரலானது. இளையராஜா இசையமைத்துள்ள இப்பாடலை அந்தோணி தாசன், யுகேந்திரன், பிரியா ஜெர்சன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இளையராஜா குரலில் ‘முத்துமணி’ பாடல்

இந்த நிலையில், மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்து பாடிய ‘டோரதி’ திரைப்படத்தின் 2வது பாடலான ‘முத்துமணி’ வெளியாகி உள்ளது. இந்த பாடலை இளையராஜா, ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளார். பாடல் வரிகளை இளையராஜாவே எழுதியுள்ளார்.