கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் ‘திரிஷ்யம்’. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இது நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார்.
அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு திரிஷ்யம் 2 வெளியானது. முதல் பாகத்தை போல இதுவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது ‘திரிஷ்யம்’ 3ம் பாகம் மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தி படத்தில் விஜய் சல்கோன்கராக அஜய் தேவ்கன், தபு, ஷ்ரியா சரண், இஷிதா தத்தா, ரஜத் கபூர் மற்றும் அக்சய் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடித்துள்ளனர். ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இப்படம் மே 15ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், திரிஷ்யம் 3 படத்தின் ரிலீசுக்கு முன் சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, "திரிஷ்யம்-3" படத்தின் ஓடிடி உரிமையை 3வது நபருக்கு வழங்க, இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய ஒப்பந்தப்படி இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்திற்கே வழங்க வேண்டும் என அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், வரும் மே 15ம் தேதி வரை வேறு எந்த நிறுவனத்துடனும் ஓடிடி ஒப்பந்தம் செய்ய, ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்திற்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.