துல்கர் சல்மானின் ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படம் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி தனது நடிப்பு மற்றும் வித்தியாசமான கதைத்தேர்வுகளால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 'வாயை மூடி பேசவும்', 'ஓகே கண்மணி' படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவரது நடிப்பில் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் மூலம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தார். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும்.
துல்கர் சல்மான் தற்போது நடிக்கும் புதிய படம் ‘ஆகாசம்லோ ஒக தாரா’. இதில் நாயகியாக சாத்விகா வீரவல்லி நடிக்கிறார். இதன் மூலம் இவர் நடிகையாக அறிமுகமாக உள்ளார். சாத்விகாவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இப்படத்தினை கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமாஸ் மற்றும் லைட் பாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. பவன் சடிநேனி இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படமும் தமிழ்,தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இத்திரைப்படத்தின் முதல் பாடலான ‘மிட்டாய் மழை’ பாடல் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. பாலாஜி வேணுகோபால் எழுதிய இப்பாடலை ரம்யா பெஹரா பாடியுள்ளார்.
இந்த நிலையில், ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படம் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.