சென்னை,
'ஜனநாயகன்' திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாவதை யொட்டி, நேற்று இரவு முதலே ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்தை தொடங்கியதால் திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டன.
தமிழக முதல்-அமைச்சரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், பல்வேறு சிக்கல்களைத் தாண்டி இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படம், விஜய்யின் திரைப்பயணத்தின் இறுதித் திரைப்படம் எனக் கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, சென்னை நகரம் முழுவதும் நேற்று இரவு முதலே திருவிழாக்கோலம் பூண்டது. படம் வெளியாகும் நாளுக்காக பல மாதங்களாக காத்திருந்த ரசிகர்கள், வெளியீட்டுக்கு முந்தைய இரவே திரையரங்குகள் முன்பு திரண்டு உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகள் அனைத்தும் பிரமாண்ட கட்-அவுட்கள், வண்ணமயமான பேனர்கள், மலர் மற்றும் மின்னொளி அலங்காரங்களால் ஜொலித்தன. விஜய்யின் கட்-அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து, மலர் தூவி, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேளதாளங்கள், பட்டாசுகள், ஆட்டம்-பாட்டம் என திரையரங்குகள் முன்பு கொண்டாட்டம் களைகட்டியது.
சென்னை கேசினோ, தேவி, ரோகிணி, சத்யம், காசி, கிருஷ்ணவேணி உள்ளிட்ட முக்கிய திரையரங்குகள் முன்பு நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். நள்ளிரவிலும் ரசிகர்களின் உற்சாகம் குறையாமல், திரையரங்குகள் முன்பு திருவிழா போன்ற சூழல் நிலவியது.
இன்று வெளியாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் காட்சியை காண ரசிகர்கள் அதிகாலையிலேயே திரையரங்குகளை நோக்கி திரண்டுள்ளனர். விஜய்யின் இறுதித் திரைப்படம் என்பதால், படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.