ஐதராபாத்,
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் ‘கருப்பு’. இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.
“கருப்பு திரைப்படம் மே 14ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், கருப்பு படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் சூர்யா, கார்த்தி, இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது மேடையில் சூர்யா மற்றும் கார்த்தி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் திடீரென மேடைக்கு ஓடி வந்து, நடிகர் சூர்யாவின் காலில் விழுந்தார். உடனே பாதுகாவலர்கள் அவரை வெளியே அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், ரசிகரை தடுக்க வேண்டாம் என பாதுகாவலர்களிடம் கூறிய சூர்யா, அந்த ரசிகரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.