மும்பை,
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நோரா பதேஹி, திரையில் எப்படி நமது நடிப்பால் கவருகிறோமோ, நிஜத்திலும் ரசிகர்களை கவர வேண்டும். ரசிகர்களின் இதயங்களே என் இலக்கு. அதை எட்டிப்பிடிக்கும் பணி ஓயாது", என்றார்.
பாலிவுட் திரையுலகில் தனது நடனத் திறமையாலும், வசீகரமான நடிப்பாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகை நோரா பதேஹி. கனடாவில் பிறந்து வளர்ந்த இவர், இந்திய சினிமாவில் தனது திறமையை நிரூபித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ‘தில்பர்’, ‘ஓ சாகி சாகி’ உள்ளிட்ட பாடல்களில் தனது நடனத்தால் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நோரா பதேஹி, தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்-2' படத்தில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். இதுதவிர ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் 'காஞ்சனா-4' படத்திலும் பேயாக மிரட்டவுள்ளார். பாலிவுட் சினிமாவை போல் கோலிவுட் சினிமாவிலும் தனது முத்திரையை பதிக்க உள்ளார்.
இதற்கிடையில் நோரா பதேஹி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன. அவர் கூறும்போது, "என்னைப் பொறுத்தவரை நம்மை பார்க்கும் ரசிகர்களின் கண்களை கவர வேண்டும். அந்த கண்கள் சில நொடிகள் நம்மை விட்டு நீங்காமல் இருக்கவேண்டும். அப்படி பார்த்துக் கொள்வது தான் வெற்றி. திரையில் எப்படி நமது நடிப்பால் கவருகிறோமோ, நிஜத்திலும் ரசிகர்களை கவர வேண்டும். ரசிகர்களின் இதயங்களே என் இலக்கு. அதை எட்டிப்பிடிக்கும் பணி ஓயாது", என்றார்.