சினிமா செய்திகள்

வரைபடத்தில்கூட இல்லாத இடத்தில் படப்பிடிப்பு... ரம்யா பாண்டியன் பகிர்ந்த அனுபவம்

'அருள்வான்' படத்தின் கதை என்னை மாற்றியது என்று நடிகை ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி.சரவணன் தயாரிப்பில், கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளிவெங்கட், வி.டி.வி.கணேஷ், கிருத்திகா நடித்துள்ள 'அருள்வான்' படம் விரைவில் திரைக்கு வருகிறது.

"கதை என்னை மாற்றியது"

இந்த படத்தில் சிறுமிக்கு தாயாக நடித்துள்ள ரம்யா பாண்டியன் கூறும்போது, “இந்த படத்தின் கதையை கேட்பதற்கு முன் கிராமத்து கதைகளில் சிறிது நாட்கள் வரை நடிக்க வேண்டாம் என்ற மனநிலையில் தான் இருந்தேன். ஆனால் இந்த கதை என்னை மாற்றியது. இன்னும் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளோ, வசதிகளோ இல்லாத இடம் மண்ணில் இருக்கிறது. அந்த நிலையிலும் மக்கள் வாழ்கிறார்கள் கேள்விப்பட்டவுடன் இதை ஒரு பொறுப்பாக ஏற்று நடித்தேன்.

"வரைபடத்திலேயே இல்லாத இடத்தில் படப்பிடிப்பு"

வரைபடத்திலேயே இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை இந்த படத்தில் தான் நாங்கள் பார்த்தோம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு இடத்தில் ஒரு ஜீவன் இருக்கிறது. அங்கு மக்கள் வாழ்கிறார்கள். அந்த மக்களுடன் பழகியது மகிழ்ச்சியாக இருந்தது. அருள்நிதி, ஆரவ் அற்புதமான அர்ப்பணிப்புள்ள நடிகர்கள். குறிப்பாக அருவி ஒன்றின் கீழ் பகுதியில் நடுங்கும் குளிரில் ஆரவ் உடல் முழுவதும் சந்தனத்தை பூசிக்கொண்டு நடித்தார். அவரது கடின உழைப்பு படத்தில் பேசப்படும்" என்றார்.