சென்னை,
தமிழ் யூடியூப் உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள வி.ஜே. சித்து, தற்போது இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘டயங்கரம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில், படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் ‘டயங்கரம்’ திரைப்படத்தை வி.ஜே. சித்து எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். படத்தில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சித்து குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வ அம்சங்கள் கலந்த கதைக்களத்தில் படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், ‘டயங்கரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழுவினர் தொடர்ந்து நீண்ட நேரம் பணியாற்றியதாகவும், படப்பிடிப்பின் போது மின்சாரம் வழங்கிய ஜெனரேட்டர் செயலிழந்ததால் பணிகளில் தடை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் திட்டமிட்டபடி நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது தொடர்பாக படக்குழு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.