மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மானின் புதிய திரைப்படமான 'ஸ்ரீ ஸ்ரீ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, தனித்துவமான நடிப்பு மற்றும் கதைத்தேர்வுகளால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தவர் துல்கர் சல்மான். தமிழ் ரசிகர்களிடையே 'வாயை மூடி பேசவும்', 'ஓகே கண்மணி' உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்ற அவர், சமீபத்தில் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் மூலம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தார்.
தற்போது அவர் நடித்துள்ள 'ஐயம் கேம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆகாசம்லோ ஒக தாரா' என்ற நேரடி தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்ரீ ஸ்ரீ' திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'ஸ்ரீ ஸ்ரீ' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினரும், நடிகர் துல்கர் சல்மானும் இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படத்தின் பின்னணி வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் முடிந்ததும், 'ஸ்ரீ ஸ்ரீ' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துல்கர் சல்மானின் இந்த புதிய படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.