Image courtecy: Instagram@chelseaislan  
சினிமா செய்திகள்

மகேஷ் பாபுவின் எஸ்.எஸ்.எம்.பி 29 படத்தில் வெளிநாட்டு கதாநாயகியா?

மகேஷுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகையை நடிக்க வைக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மகேஷ் பாபு தனது தோற்றத்தை மாற்றி வருகிறார். மேலும், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார். தற்போது, இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மகேஷுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகையை நடிக்க வைக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இந்தோனேசிய நடிகை செல்சியா எலிசபெத் இஸ்லானுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அவருடன் மேலும் இரண்டு வெளிநாட்டு நடிகைகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.