சினிமா செய்திகள்

"மும்பையில் இருந்து சென்னை வரும் வரை.." எஸ்பிபி-உடனான நினைவுகளை பகிர்ந்த ரஜினிகாந்த்

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அருமையான மனிதர் அவரைப் பற்றி இந்தியாவில் தெரியாதவர்களே இல்லை என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கேரள மாநிலம் பாலக்காட்டில் நினைவிடம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், எஸ்.பி.பியுடன் ஆன நினைவுகளை பகிர்ந்து உருக்கமாக பேசினார். ரஜினிகாந்த் அப்போது கூறியதாவது:

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அருமையான மனிதர். அவரைப் பற்றி இந்தியாவில் தெரியாதவர்களே இல்லை. அந்த ஒரு பார்வை, திறமை... அதனால் எல்லோரையும் மகிழ வைத்தவர். அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு ஒருமுறை வந்தேன். மும்பையில் டிரான்சிட். மும்பைக்கு அதிகாலை 1.30 மணிக்கு வந்தேன். மும்பையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விமானத்தில் ஏறினார். அப்போதான் சங்கராபுரம் ரிலீஸ் ஆகியிருந்தது. அந்த பாட்டு அப்போது ரொம்ப பிரபலமாக இருந்தது. எஸ்.பி.பியை பார்த்ததும் விமானத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சங்கராபுரம் பாட்டு பாடுமாறு கூறினார்கள்.

அவர் பாட்டு பாடியதும், “ஒன்ஸ் மோர், ஒன்ஸ் மோர்” என்று சொல்லிக்கொண்டு சென்னை வரும் வரை 1.30 மணி நேரம் சலிக்காமல் பாட்டு பாடி எல்லோரையும் மகிழ வைத்தார். அந்த மாதிரி அருமையான மனிதர் எஸ்.பி.பி. அவர் அகாலமாக இறந்து போனது மிக மிக வருத்தமான விஷயம். இந்த அவசர காலத்தில் எல்லோரையும் மறந்துவிடாதீர்கள். அவரை மறக்காமல் இருக்க பாலக்காட்டில் அருமையான சிலை உருவாக்கியிருக்கிறார்கள்” என்று கூறினார்.