சென்னை,
தமிழகத்தின் 13-ஆவது முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்-அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை தலைமைச்செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய் முறையாக பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து அரசின் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் நடிகர் விஷால் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் விஜய்க்கு எனது வாழ்த்துகள். அவரை எப்போதுமே தளபதி என்று அழைக்கத்தான் எனக்குப் பிடிக்கும். தமிழகத்தின் முதலமைச்சராக அவர் பதவியேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. நம் திரையுலகைச் சார்ந்த ஒரு ஆளுமை மாநிலத்தை வழிநடத்துவதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.வெற்றிபெற்ற அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும், அமைச்சர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள். இது நம் மாநிலத்தின் பொற்காலமாக அமையட்டும். அன்புள்ள முதல்வர் விஜய் சார், கடந்த 32 ஆண்டுகளாக எனக்குத் தெரிந்த ஒரு நபரை, இன்று 'சார்' என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன்.
ஒரு வாக்காளராக உங்களிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன். முதலமைச்சர் தனது வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு செல்லும்போது, வெயிலில் நின்றுகொண்டிருக்கும் பெண் காவலர்களின் நிலையை நீங்கள் கவனிப்பீர்கள் என நம்புகிறேன். அவர்களுக்கு நடமாடும் கழிப்பறை வசதிகளை செய்து தர வேண்டுகிறேன். கடந்த 30 ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் சாலைகளின் நிலை, மழைநீர் தேங்குதல், இன்னும் பயன்பாட்டிற்கு வராத மழைநீர் வடிகால் வசதிகள் போன்ற அடிப்படைப் பிரச்னைகளைச் சரி செய்ய வேண்டும் என ஒரு சராசரி மனிதனாகக் கேட்டுக்கொள்கிறேன். இதுவரை எந்தத் தலைவரும் செய்யாத சில மாற்றங்களை நீங்கள் முன்னெடுத்தால், அது மிகப்பெரிய அடையாளமாக மாறும்” என்று பதிவிட்டுள்ளார்.