எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம், தணிக்கை வாரிய சான்றிதழ் கிடைக்காததால் ரிலீசுக்கு வராமல் முடங்கி கிடக்கிறது. மறு தணிக்கை குழு படத்தை பார்த்தபிறகும் இதுவரை ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளிவரவில்லை.
இதற்கிடையில் கடந்த 10-ந்தேதி 'ஜனநாயகன்' முழு படமும் எச்.டி. தரத்தில் இணையத்தில் கசிந்தது. இது படக்குழுவினர் தாண்டி ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ஜனநாயகன் ரிலீஸ் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளன. சட்டமன்ற தேர்தல் (வருகிற 23-ந்தேதி) முடிந்தபிறகு, உடனடியாக படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். அதன்படி, நேற்று திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுடன் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் தரப்பு ஒத்துழைப்பு தர முடிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து இன்று ஓடிடி நிறுவனத்துடன் தயாரிப்பாளர் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதெல்லாமே சரியாக நடக்கும் பட்சத்தில் வருகிற 24-ந்தேதி அல்லது 25-ந்தேதி 'ஜனநாயகன்' படம் ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலாக அமைந்திருக்கிறது.