சினிமா செய்திகள்

மறைந்த பாடகி எஸ்.ஜானகிக்கு பாட்டு பாடி இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்

பாடகி ஜானகி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் அவரது இசைக்குழுவினர், மறைந்த பாடகி எஸ். ஜானகிக்கு பாடல் மூலம் உருக்கமான அஞ்சலி செலுத்தினர்.

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகி உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இரவு மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88. இந்தியத் திரையிசையில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்தவர். 4 தேசிய விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர் பாடகி எஸ்.ஜானகி. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும்,ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் மறைவு இசை ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லண்டன் இசை நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்திய இளையராஜா

ஐரோப்பா நாடுகளில் இசை நிகழ்ச்சிகளில் இளையராஜா பங்கேற்று வருகிறார். லண்டனில் நேற்று நடந்த இசை நிகழ்ச்சியில் ஜானகிக்கு மவுன அஞ்சலி செலுத்தினார். இளையராஜா அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் அவருக்கு ரசிகர்கள் முன்னிலையில் மவுன அஞ்சலி செலுத்தினார்.

அந்த நிகழ்ச்சியில் இளையராஜா “எஸ்.ஜானகி இறைவனடி சேர்ந்துவிட்டார். அவர் உழைப்பு அதிகம். என்னுடைய 50 ஆண்டு இசை பயணத்தில் அவரோடு நிறைய பாடல்களில் பணியாற்றி இருக்கிறேன். அவர் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவருக்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துங்கள்” என்றார்.

இந்நிலையில், லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் அவரது இசைக்குழுவினர், மறைந்த பாடகி எஸ். ஜானகிக்கு பாடல் மூலம் உருக்கமான அஞ்சலி செலுத்தினர். ஜானகி பாடிய ‘ஜானி’ படத்தில் இடம்பெற்ற ‘காற்றே எந்தன் கீதம்’ பாடலை கங்கை அமரன், எஸ்பிபி சரண், ஸ்வேதா மோகன், ஹரிச்சரண் மற்றும் பாடகர்கள் குழுவாக இணைந்து பாடி இசை அஞ்சலி செலுத்தினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.