தன் வாழ்க்கையில் நினைத்துக் கூடப் பார்க்காத அளவிற்கு, இவ்வளவு அழகான உணர்வுகளை என்னால் வெளிப்படுத்த முடியும் என்பதை சாரா மூலம் உணர்ந்ததாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் . கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். இவர் விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ படத்தை ஏற்கனவே இயக்கியிருந்தார். காமெடி கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.
இப்படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்து ‘கட்டா குஸ்தி 2’ படத்தை இயக்கியுள்ளார். இதனை விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. முதல் பாகத்தை போல படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தை நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கே கணேஷ் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்திருந்தனர்.
செல்லாவு அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் 3 நாள்களில் ரூ.22 கோடிக்கும் மேல் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆகும்நிலையில், இதுவரை ரூ. 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.
இந்த நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, “நாம் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பிற்கு செல்லும்போது, நம்முடைய உழைப்பில் ஆகச்சிறந்ததைக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு கனவோடுதான் செல்வோம். ஏனென்றால், ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து படத்தைப்பார்க்கும்போது, அதில் ஏதோ ஒரு குறை இருப்பதாக அவர்கள் நினைத்துவிடக் கூடாது. இப்படிப்பட்ட பிரம்மாண்டமான ஒரு வெற்றி என்பது எப்போதாவது ஒருமுறைதான் நமக்குக் கிடைக்கும். இப்போது நாம் அடைந்திருக்கும் இந்த வெற்றியை எல்லாரும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள், ஊடக நண்பர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்காக நான் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னோடு இணைந்து பணியாற்றிய இந்த அற்புதமான குழுவிற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இதில் இந்த ஒரு நபர் மட்டும்தான் முக்கியமானவர் என்று யாரையும் பிரித்துச் சொல்லிவிட முடியாது. படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்களுடைய 100% உழைப்பையும், பங்களிப்பையும் கொடுத்துள்ளார்கள். என்னுடைய தொழில்நுட்பக் கலைஞர்கள் , சக நடிகர்கள், படத்தின் கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளர் விஷ்ணு சார் என அனைவருக்கும் என் நன்றிகள். இயக்குநர் 'செல்லா' சாருக்கு என்னுடைய பிரத்யேக நன்றிகள். இந்த அழகான வெற்றியில் என்னையும் ஒரு பகுதியாக மாற்றியதற்கு உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
சிறுமி சாராவிற்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றி. ஏனென்றால், என் வாழ்க்கையில் நான் நினைத்துக் கூடப் பார்க்காத அளவிற்கு, இவ்வளவு அழகான உணர்வுகளை என்னால் வெளிப்படுத்த முடியும் என்பதை அவரின் மூலம் உணர்ந்தேன். மக்கள் அதை ஏற்றுக்கொண்டு ரசிப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.