சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இல்லாமல் த.வெ.க. உள்ளது. இதனால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதற்கிடையில், விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாததால், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க உள்ளதாக ஒரு தகவல் நேற்று இரவு காட்டுத்தீ போல் பரவியது. இதற்கு ஏற்றார்போல் இரு கட்சிகளும் தனித்தனியாக நேற்று பல மணி நேரம் ஆலோசனை நடத்தின. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு அச்சாரமாகத்தான் ரஜினிகாந்தும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை 2 கட்சிகளும் மறுப்பு தெரிவிக்காததால், இந்த தகவல் உண்மை என்றே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்பிடென்டா இருப்போம்" என்று விஜய்யின் கட்சிக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.