கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

அவரை போன்ற நல்ல கலைஞர்கள் தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவை - நடிகை அனுமோல்

சினிமா பற்றி ஒவ்வொரு நாளும் புதிதாக தெரிந்து கொண்டு வருகிறேன் என்று நடிகை அனுமோல் தெரிவித்துள்ளார்.

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

சென்னையில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை அனுமோல் பேசும்போது, "சினிமா பற்றி நான் ஒவ்வொரு நாளும் புதிதாக தெரிந்து கொண்டு தான் வருகிறேன். இந்த மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஒரு புதிய விஷயத்தை, அவசியமான விஷயத்தை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படித்தான் எனது கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து வருகிறேன்.

இந்தப் படத்தில் குரு சோமசுந்தரத்துடன் நடித்தது நல்ல அனுபவம். நாங்கள் இருவரும் ஒரு மலையாள படத்தில் நடித்திருந்தோம். அந்தப் படத்தில் அவரை கொலை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்தேன். அவர் பழகுவதற்கு எளிதான நபர். ஆனால் அடிக்கடி என்னை கிண்டல் செய்வார்.

இப்போது கூட நான் அழகாக இல்லை என்றும், இன்னொரு நடிகை அழகாக இருக்கிறார் என்றும் என்னிடமே சொல்கிறார். இதனால் சண்டை வந்தது. இப்படி செல்லமாக சண்டைகள் அடிக்கடி நடக்கும். அவரது நகைச்சுவை உண்ர்வு மிகவும் பிடிக்கும். அவரை போன்ற நல்ல கலைஞர்கள் தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவை", என்று கூறினார்.