சினிமா செய்திகள்

வரைமுறை இல்லாமல் ‘கிசுகிசு’க்க கூடாது - நடிகை கியாரா அத்வானி காட்டம்

தந்தை மகள் பாசத்தில் இருப்போரை அபாண்டமாக இப்படி சொல்வது தவறு என்று கியாரா அத்வானி காட்டம் தெரிவித்துள்ளார்.

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் சாரா அர்ஜுனுக்கு தந்தையாக 71 வயதான மூத்த நடிகர் ராகேஷ் பேடி நடித்துள்ளார்.

இந்நிலையில், படத்தின் விழாவில் சாராவின் தோளில் முத்தமிடும் ராகேஷ் பேடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, “20 வயது நடிகையிடம் 71 வயது நடிகர் இப்படியா நடந்து கொள்கிறார்?” என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இதுகுறித்து ராகேஷ் பேடி கொடுத்த விளக்கத்தில், "படத்தில் சாரா என் மகளாக நடித்திருந்தார். அவரை எங்கு பார்த்தாலும் மகளாக நினைத்து கட்டிப்பிடித்து அன்பு பாராட்டுவேன்”, என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ராகேஷ் பேடியை சந்தித்து பேசிய பாலிவுட் முன்னணி நடிகை கியாரா அத்வானி, அவர் கட்டிப்பிடிக்க தயங்கியதை கண்டித்தார். மேலும் தானாக சென்று அவரை கட்டிப்பிடித்து அன்பு பாராட்டினார்.

இதுபற்றி கியாரா அத்வானி கூறும்போது, 'கிசுகிசு தவறல்ல. ஆனால் ஒரு வரைமுறை இல்லாமல் கிசுகிசுக்கக் கூடாது. தந்தை மகள் பாசத்தில் இருப்போரை அபாண்டமாக இப்படி சொல்வது தவறு. கட்டிப்பிடித்தல் என்பது அன்பின் வெளிப்பாடு தான். அதில் அற்பத்தனம் வேண்டாமே...' என்று காட்டம் தெரிவித்தார்.