சினிமா செய்திகள்

சூர்யாவின் “கருப்பு” படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் வரும் 14ம் தேதி வெளியாகவுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல், கலை மற்றும் சினிமா துறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளைத் திரையிட அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது. வரும் 14ம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்திற்கு, வெளியீட்டு நாளன்று ஒரு சிறப்பு காட்சி வீதம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த செயல் சினிமா ஆர்வலர்கள் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அரசாணை எண் 460-ன் படி, மே 14 மற்றும் மே 15 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியை திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக தமிழகத்தில் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் மட்டுமே திரையிடப்படும் நிலையில், தற்போது ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் (காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை) திரையிட இந்த ஆணை வழிவகை செய்கிறது. தயாரிப்பு நிறுவனமான 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' விடுத்த கோரிக்கையை ஏற்று, முதல்வர் விஜய் இந்த சலுகையை வழங்கியுள்ளார். இது பெரிய பட்ஜெட் படங்களின் வசூலுக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.