சினிமா செய்திகள்

சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சென்னையில் மரணமடைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

பிரபல டி.வி. நடிகை சித்ரா பூந்தமல்லி அருகே தனியார் ஓட்டல் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். மகளின் சாவுக்கான காரணம் குறித்து விசாரிக்குமாறு அவரது தந்தை புகார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பதிவு திருமணம் செய்து 2 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஹேம்நாத் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது படப்பிடிப்பு தளத்தில் தகராறு ஏதேனும் நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஓட்டல் அறையின் வெளியே இருந்த அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து, அதில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் உறவினர்களுக்கு சம்மன் அளித்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரையில், சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா? கொல்லப்பட்டரா என்பது வலுத்த சந்தேகமாக உள்ளதால், சித்ராவினுடைய நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூறாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்தது. இந்த பிரேத பரிசோதனைக்கு பிறகே சித்ராவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அவரது உடல் இறுதி சடங்கிற்காக கோட்டூர்புரம் கொண்டு செல்லப்பட்டது.