நடிகை ஹன்சிகா, நடிகர் தனுஷ் உடன் 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் பிரியாணி, சிங்கம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். மை 3 என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் இருவரையும் சமாதானப்படுத்த முயன்ற முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிய முடிவு செய்ததாக தெரிகிறது. மேலும், இந்த தம்பதியினர் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முதலே தனித்தனியாக வசித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து இருவரும் கடந்த ஆண்டு மும்பை குடும்ப நல கோர்ட்டில் விவகாரத்து கோரி விண்ணப்பித்தனர். முதலில் நடிகை ஹன்சிகா மோத்வானி தானாகவே கோர்ட்டை அணுகி விவாகரத்து மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீது உத்தரவு பிறப்பித்த மும்பை கோர்ட்டு இருவருக்கும் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்து வழங்கியுள்ளது. ஹன்சிகா தனது விவாகரத்து விஷயத்தில் கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில் விவாகரத்துக்கு பிறகு முதன்முறையாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். பஞ்சாபி மொழியில் ‘Chardi kala always’ என பதிவிட்டுள்ளார். இந்த வார்த்தையின் அர்த்தம், வாழ்க்கையில் நீங்கள் என்ன சிரமங்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டாலும், மிகவும் நேர்மறையான மற்றும் அசைக்க முடியாத தைரியத்துடன் முன்னேறுங்கள் என்பது தான். இதன் மூலம் தான் வலிமையுடன் இருப்பதாக அவர் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.