சென்னை,
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது படங்களின் வெற்றி, தோல்வி குறித்து பி.எஸ்.மித்ரன் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “‘இரும்புத்திரை’ வெற்றிக்குப் பிறகு ‘ஹீரோ’ தோல்வியடைந்தது என் கண்களைத் திறந்தது. கடினமாக உழைத்தால் மட்டும் வெற்றி கிடைக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’, ‘சர்தார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இவர், தற்போது நடிகர் கார்த்தியை வைத்து ‘சர்தார் 2’ படத்தை இயக்கி வருகிறார். ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இரும்புத்திரை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ஹீரோ’ திரைப்படத்தை மித்ரன் இயக்கினார். கல்வி மற்றும் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது படங்களின் வெற்றி, தோல்வி குறித்து பி.எஸ்.மித்ரன் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “‘இரும்புத்திரை’ வெற்றிக்குப் பிறகு ‘ஹீரோ’ தோல்வியடைந்தது என் கண்களைத் திறந்தது. கடினமாக உழைத்தால் மட்டும் வெற்றி கிடைக்காது. ஆடியன்ஸ் என்ன கதையை விரும்புகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சினிமாவில் வெற்றியை நம்மால் ஃபிக்ஸ் செய்ய முடியாது” என்று மித்ரன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ‘சர்தார் 2’ படத்தை முடித்த பிறகு பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.