சினிமா செய்திகள்

"எனக்கு பிடித்த நடிகர் அவர்தான்"- மகுடம் பட விழாவில் நடிகர் விஷால் பேச்சு

விஷால் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ படம் வருகிற 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை,

‘மகுடம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால், எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என்று தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

‘மகுடம்’ படத்தில் இயக்குநராக அறிமுகம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார். விஷால் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், படத்தில் விஷால் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கவனம் பெற்ற டிரெய்லர்

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99-வது படமாக ‘மகுடம்’ உருவாகியுள்ளது. இப்படத்தின் மூலம் விஷால் இயக்குநராகவும் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். படம் வருகிற 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி நேற்று வெளியான படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் டிரெய்லர் கவனம் பெற்று வருகிறது.

“எனக்கு பிடித்த நடிகர் விஜய்தான்”

இந்த நிலையில், ‘மகுடம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- “எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய். அவர் தற்போது முதல்-அமைச்சராக இருக்கிறார். அவருடைய படங்களை தியேட்டரில் பார்த்து ரசித்ததைப் போலவே, எனது படத்தையும் ரசிகர்கள் தியேட்டரில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

புது முக இயக்குநர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் ஒரு வரம் என்றுதான் சொல்வேன். அவரிடம் எந்தவித ஈகோவும் கிடையாது. ஒரு இயக்குநருக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு சிறப்பாக பணியாற்றக்கூடியவர்” என்றார். விஷாலின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.