சினிமா செய்திகள்

'அவர்தான் என் மியூசிக்கல் ஐகான்'... மனம் திறந்த ஜி.வி. பிரகாஷ்

'விஸ்வநாத் & சன்ஸ்' இசை வெளியீட்டு விழாவில் ஜி.வி. பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார்.

கோவை,

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என தமிழ் திரையுலகில் பன்முக திறமையுடன் வலம் வரும் ஜி.வி. பிரகாஷ், தனது இசைப் பயணத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இருந்ததாக தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

19 வயதில் இசையமைப்பாளராக அறிமுகம்

ஏ.ஆர். ரகுமானின் அக்கா மகள் ஏ.ஆர். ரெஹைனாவின் மகனான ஜி.வி. பிரகாஷ், சிறுவயதிலேயே ரகுமான் இசையில் வெளியான பல பாடல்களில் தனது குரலை பதிவு செய்துள்ளார். பின்னர், இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' திரைப்படம் மூலம் 19 வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதுவரை 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், 500-க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியதுடன், சுமார் 100 பாடல்களை பாடியுள்ளார். மேலும், 'சூரரைப் போற்று', 'வாத்தி' உள்ளிட்ட படங்களுக்காக இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

நடிகராகவும் கலக்கும் ஜி.வி. பிரகாஷ்

'டார்லிங்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ், இதுவரை 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள 'இம்மார்ட்டல்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

'விஸ்வநாத் & சன்ஸ்' இசை வெளியீட்டு விழா

சூர்யா மற்றும் மமிதா பைஜு நடித்துள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோவையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஜி.வி. பிரகாஷ், தனது இசைப் பயணம் குறித்து மனம் திறந்தார்.

விழாவில் பேசிய ஜி.வி. பிரகாஷ், "ரகுமான் சார் தான் என்னுடைய மியூசிக்கல் ஐகான். சின்ன வயதில் இருந்தே அவருடைய பாடல்களைக் கேட்டு வளர்ந்தேன். அவரிடம் உதவியாளராகவும் பணியாற்றியிருக்கிறேன். ஒரு குருவாகவும், மென்டராகவும் அவர் என்னை ஊக்கப்படுத்தியபோது கிடைத்த மகிழ்ச்சியே எனக்கு மிகப்பெரிய விருது. அவருடைய பாராட்டும் ஊக்கமும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.