சினிமா செய்திகள்

அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்! - `பத்தா' பட விழாவில் விஜய்சேதுபதி பேச்சு

`பத்தா' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சென்னை,

`பத்தா' பட விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ஜேசன் சஞ்சய் பிறந்தநாளில் விஜய் தனக்கு போன் செய்த நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியுடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கதாநாயகன் மட்டுமின்றி வில்லன், குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளார்.

பாலாஜி தரணிதரனுடன் மீண்டும் கூட்டணி

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ‘பத்தா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

அட்லீ தயாரிப்பில் உருவாகும் படம்

இப்படத்தை இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும், ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 - சினி1 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன. விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணி, அட்லீயின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சாய் அபயங்கரின் இசை என பல்வேறு காரணங்களால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 1ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

இந்த நிலையில், பத்தா படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினார்.

அந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ஜேசன் சஞ்சய் பிறந்தநாளில் விஜய் தனக்கு போன் செய்த நிகழ்வை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் பேசியபோது, "நான் ஜேசன் சஞ்சய்க்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோது, முதல்வர் விஜய் எனக்கு போன் செய்து, 'நண்பா ரொம்ப நன்றி.. சஞ்சய்க்கு உங்களை ரொம்ப பிடிக்கும்' என்றார். உண்மையாகவே நான் அதை எதிர்பார்க்கவில்லை; அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!... சஞ்சய்க்கு என்னை பிடித்திருக்கிறது என்பது எனக்குப் பெரிய ஆச்சரியம். ‘என்னடா உங்க வீட்ல இவ்வளவு பெரிய ஆள் இருக்கும்போது என்னை பிடிச்சிருக்குன்னு சொல்ற?’ என்று நான் சஞ்சயிடமே கேட்டேன்" என்று அந்த நிகழ்ச்சியில் பேசினார்.

SCROLL FOR NEXT