சினிமா செய்திகள்

“ஞானபீட விருது” வென்ற கவிஞர் வைரமுத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து

வைரமுத்துக்கு, இலக்கியத் துறையில் மிகச் சிறந்த விருதான ‘ஞானபீட விருது’ டெல்லியில் சமீபத்தில் வழங்கப்பட்டது.

இலக்கியத்தில் மிக சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு சாகித்ய அகாடெமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல இலக்கியத்தில் இந்தியாவின் மிக உயரிய விருதாக ஞானபீட விருது கருதப்படுகிறது. எழுத்தாளர் தன் வாழ்நாளில் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டு வருகிறது

இந்த விருது 1962ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிகவும் பழமையான இலக்கிய விருதுகளில் இதுவும் ஒன்று. அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அகிலனின் ‘சித்திரப்பாவை’ படைப்புக்கு 1975ம் ஆண்டு ஞானபீட விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு 2002ம் ஆண்டு ஜெயகாந்தன் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. எண்ணற்ற தகுதி வாய்ந்த எழுத்தாளர்கள் இருக்கும் போதிலும் 1965ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டுவரை இரண்டு தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமே ஞானபீட விருதைப் பெற்றுள்ளனர்.

ஞானபீட விருது பெற்ற 3வது தமிழர்

கடந்த 13ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில், காஷ்மீர் மன்னர் பரம்பரையின் வழி வந்தவரும், மத்திய முன்னாள் அமைச்சரும், இந்தியத் தத்துவ ஞானியுமான டாக்டர் கரண் சிங் ஞானபீட விருதினை வைரமுத்துக்கு ஞானபீட விருது வழங்கினார்.

சுமார் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெரும் பெருமை இது என்று இலக்கியத் துறையினர் கொண்டாடி வருகிறார்கள். பலதுறை தலைவர்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தமிழ் இலக்கியத் துறையில் இதுவரை 1975ஆம் ஆண்டு எழுத்தாளர் அகிலன், 2002ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகிய இரண்டு பேர் மட்டுமே ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள். தற்போது தமிழகத்திலிருந்து மூன்றாவது கவிஞராக ஞானபீட விருதினை வைரமுத்து பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிதைக்கு முதல் முறை:

இதற்கு முன் இந்த விருதைப் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் வசன நடை/நாவல்களுக்காகப் பெற்ற நிலையில், தமிழ் கவிதைக்காக ஞானபீட விருது பெறப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

வைரமுத்துவை பாராட்டிய மத்திய உள்துறை அமைச்சர்

இந்திய இலக்கியத் துறையின் மிக உயரிய விருதான ‘ஞானபீட விருது’ வென்றுள்ள பிரபல தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான ‘வைரமுத்துக்கு’ மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “தங்களின் பல ஆண்டுகால தளராத அர்ப்பணிப்பு, ஆழமாக அறிவுத்திறன் மற்றும் சிறந்த படைப்பாற்றலுக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த விருது. எதிர்காலத்திலும் உங்கள் படைப்புகள் சமூகத்திற்கு புதிய பார்வை, புதிய விழிப்புணர்வு மற்றும் நேர்மறையான வழிகாட்டுதலை வழங்கும். வருங்காலத் தலைமுறைகள் தங்களது தாய்மொழிகளுடனும், இலக்கியத்துடனும் தொடர்ந்து இணைந்திருக்க ஊக்கமளிக்கும் இந்த வரலாற்று சாதனையை முன்னிட்டு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறேன்” என்று அமித்ஷா வைரமுத்தை பாராட்டியுள்ளார்,

வைரமுத்து இதற்கு முன்னர் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, சாகித்ய அகாடமி, கலைமாமணி விருது, பாவேந்தர் விருது, பாரதி இலக்கிய பரிசு போன்ற விருதுகளையும், 7 தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.