சினிமா செய்திகள்

'தினசரி' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

ஸ்ரீகாந்த் நடித்துள்ள 'தினசரி' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

ஜி.சங்கர் இயக்கத்தில் ரூகாந்த நடிப்பில் காதலர் தினத்தில் வெளியான படம் 'தினசரி'. இந்தப் படத்தினை அமெரிக்காவைச் சேர்ந்த தயாரிப்பாளரான சிந்தியா தயாரித்தது மட்டும் இல்லாமல், படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இதில் பிரேம்ஜி, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், மீரா கிருஷ்ணன், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்தநிலையில் ஸ்ரீகாந்த் நடித்துள்ள 'தினசரி' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

ஐ.டி.கம்பெனியில் வேலை செய்யும் ஶ்ரீகாந்த் தன்னை விட அதிகம் சம்பாதிக்கும் பெண்ணை திருமணம் செய்யும் முடிவோடு இருக்கிறார். அவர் எதிர்பார்த்த வரன் அமையாமல் திருமணம் தடைபடுகிறது. ஒரு கட்டத்தில் சிந்தியா லூர்டேவை அதிகம் சம்பாதிப்பதாக ஏமாற்றி ஶ்ரீகாந்துக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார் அவரது தாயார்.

திருமணத்துக்கு பிறகு உண்மை தெரிந்து கொந்தளிக்கும் ஶ்ரீகாந்த், மனைவியுடன் நெருங்குவதை தவிர்க்கிறார். பிறகு பணம் சம்பாதிக்கும் பேராசையில் அவர் எடுக்கும் முடிவு சிக்கலில் மாட்டி விடுகிறது. அதில் இருந்து மீண்டாரா? மனைவியை ஏற்றுக்கொண்டாரா? என்பது மீதி கதை. 

ஶ்ரீகாந்த் கதாபாத்திரத்தை ரசித்து செய்து இருக்கிறார். பணம் சம்பாதிக்க வெறி. திருமண வாழ்க்கையில் ஏமாற்றம். வேலைக்கு ஆபத்து வந்ததும் கதி கலங்கி நிற்பது என உணர்வுகளை உயிர்ப்போடு வெளிப்படுத்தி கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார். தமிழ் கலாசாரத்தை நேசிக்கும் வெளிநாட்டு பெண்ணாக வரும் சந்தியா லூர்டே, கணவன் உதாசீனம் செய்வதை உள்ளுக்குள் குமுறலாக வைத்துக் கொண்டு குடும்பத்தினரோடு உறவாடும் அழுத்தமான கதாபாத்திரத்தில் அம்சமாக நடித்து இருக்கிறார்.

தந்தையாக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் தத்துவார்த்தமான வசனங்கள் கவனம் பெறுகின்றன. பிரேம்ஜி அமரன் நகைச்சுவை ஏரியாவை கலகலப்பாக நகர்த்துகிறார். சாம்ஸ், சரத், சாந்தினி தமிழரசன் ஆகியோரும் நிறைவு. ராதாரவி, மீரா கிருஷ்ணன், வினோதினி ஆகியோர் அனுபவ நடிப்பை வழங்கி உள்ளனர்.

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு நன்று. இளையராஜாவின் இசை மனதை வருடுகிறது. இடைச்செருகலா வரும் அவரது பழைய பாடல்கள் காட்சிகளை மெருகூட்டுகிறது. சில காட்சிகள் நாடகத்தனமாய் நகர்வது பலகீனம். சொந்த உறவுகளே உயர்வு. பண ஆசை பெரு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்ற கருவில் படத்தை ரசிக்கும் வகையில் கொடுத்துள்ளார் இயக்குனர் ஜி.சங்கர்.

SCROLL FOR NEXT