சென்னை,
யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தை ரிஷப் ஷெட்டி பாராட்டியுள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்ஸிக்’. கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படம் கடந்த 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘டாக்ஸிக்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படம் குறித்து கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“பெரும்பாலான திரைப்படங்கள் பயணிக்கும் வழக்கமான பாதையில் இப்படத்தின் கதையும், முக்கிய கதாபாத்திரங்களும் பயணிக்காமல் இருக்கலாம். ஆனால், அதனால் அந்தப் பாதை தவறானது என்று அர்த்தமில்லை.
ஒரு கதையை உருவாக்குவதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பும், மனதில் தோன்றிய ஒரு எண்ணம் திரைப்படமாக திரையில் உருவாகும் வரையிலான பயணமும் மிகப்பெரியது” என்று ரிஷப் ஷெட்டி குறிப்பிட்டுள்ளார்.
யாஷின் நடிப்பை பாராட்டிய அவர், “யாஷ் சார், ஒரு கதாபாத்திரத்திற்காகவும், அதற்கான உலகத்திற்காகவும் உங்களை முழுமையாக அர்ப்பணித்த விதத்திற்கு தலைவணங்குகிறேன்.
மிகப்பெரிய அளவிலான நடிப்பை கோரும் இந்தக் கதாபாத்திரத்தில், ஒவ்வொரு காட்சியிலும் உங்களது அர்ப்பணிப்பை என்னால் தெளிவாக உணர முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “குற்ற உணர்வு வாழ்க்கையில் எவ்வாறு நச்சுத்தன்மையை அதிகரிக்கிறது என்பதை உணர்த்துவது எளிதான காரியமல்ல. இப்படியொரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டதற்காக நான் உங்களுடன் நிற்கிறேன்.
கன்னட சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற உங்களது அன்பிற்காக நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என்றும் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.