சினிமா செய்திகள்

நான் சந்தித்தவர்களில் மிக கண்ணியம் நிறைந்த மனிதர் ஹிரித்திக் ரோஷன்; நடிகை திஷா படானி

நான் சந்தித்தவர்களில் மிக கண்ணியம் நிறைந்த மனிதர் ஹிரித்திக் ரோஷன் என நடிகை திஷா படானி கூறியுள்ளார்.

மும்பை,

இந்தி திரையுலகின் பிரபல நடிகர் ஹிரித்திக் ரோஷன். இவர் கிரிஷ் 3 படத்தில் நடித்தபொழுது நடிகை கங்கனா ரணாவத்துடன் காதல் ஏற்பட்டது என கூறப்பட்டது. அதன்பின் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்கு மோதல் வளர்ந்தது. பின் இருவரும் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

இந்த நிலையில், ஹிரித்திக்கின் மனைவி அவரிடம் இருந்து பிரிந்து சென்று விட்டார். கங்கனா விசயத்தில் எந்த தவறையும் செய்யவில்லை என ஹிரித்திக் கூறினார்.

இந்நிலையில், நடிகை திஷா படானியுடன் தவறாக நடந்து கொண்டார் என்றும் அதனால் ஹிரித்திக் உடனான படத்தில் நடிக்க அவர் மறுத்து வெளியேறினார் என்றும் வதந்திகள் பரவின.

இதுபற்றி நடிகை திஷா கூறும்பொழுது, ஹிரித்திக் மற்றும் என்னை பற்றி குழந்தைத்தனம் மிக்க மற்றும் பொறுப்பற்ற முறையிலான வதந்திகள் சில பரவி வருகின்றன.

இதில் முற்றிலும் உண்மையில்லை என நான் கூற விரும்புகிறேன். குறைந்த நேர அளவிலேயே அவருடன் பேசினேன். அவர் மிக கண்ணியம் நிறைந்த மற்றும் மகிழ்ச்சியான மனிதர்.

அவருடனான படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினேன் என்பதில் எந்த உண்மையும் இல்லை. நான் நடிக்க விரும்பும் பட்டியலில் உள்ள நபர்களில் உயர்ந்த இடத்தில் இருப்பவர் அவர் என்றும் கூறியுள்ளார்.