சினிமா செய்திகள்

கூட்ட நெரிசல் மரணம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கோர்ட் சம்மன்

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்பட சிறப்புக் காட்சியை பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

ஐதராபாத்,

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 2024 ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி வெளியானது. 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ரேவதி உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2024 ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி கைது செய்யப்பட்டார். நம்பள்ளி நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்தது.

இந்த துயர சம்பவம் தொடர்பாக சிக்கடப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். திரையரங்க நிர்வாகம் 1 முதல் 10 வரையிலான குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன், மேலாளர் உட்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது

இந்நிலையில், ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சியின் போது திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெண் உயிரிழந்த வழக்கில், நேரில் ஆஜராகுமாறு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நம்பள்ளி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 22-ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் ஆஜராக ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.