சினிமா செய்திகள்

"ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்"- தமன்னா வருத்தம்

தமன்னா, ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

சவால் தரும் கதாபாத்திரங்களில் நடிக்க தனக்கு அதிக ஆர்வம் இருப்பதாகவும், ஆனால் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அதிகம் அணுகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிசியான நடிகை தமன்னா

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர், தனது நடிப்புடன் கவர்ச்சி நடனங்களாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கும் ‘புருஷன்’ திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர இந்தியில் 5 புதிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

உச்சத்தில் சென்ற மார்க்கெட்

‘மில்க்கி பியூட்டி’ என ரசிகர்களால் அழைக்கப்படும் தமன்னா, ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து இந்தியில் வெளியான ‘ஸ்த்ரீ 2’ படத்தின் ‘ஆஜ் கி ராத்’ பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் தமன்னாவின் மார்க்கெட் மேலும் உயர்ந்தது.

“சவால் தரும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை”

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சினிமா பயணம் குறித்து தமன்னா மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், சவால் தரும் கதாபாத்திரங்களில் நடிக்க தனக்கு அதிக ஆர்வம் இருப்பதாகவும், ஆனால் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அதிகம் அணுகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

“கவர்ச்சியான பிம்பத்தைத் தாண்டி நடிக்க வேண்டும்”

மேலும், ஒரு கவர்ச்சியான பிம்பத்தைத் தாண்டி, ஒரு நடிகையாக தன்னை முழுமையாக வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்களை இயக்குநர்கள் வழங்க வேண்டும். சினிமா காலத்திற்கேற்ப தொடர்ந்து மாறி வருவதாக குறிப்பிட்ட அவர், கதையின் தேவைக்கேற்ப முத்தக் காட்சிகள் இடம்பெற்றால் அவற்றை மட்டும் தனியாக பிரித்துப் பார்க்கவோ அல்லது தவறாக மதிப்பிடவோ கூடாது என்றும் தெரிவித்துள்ளார். தமன்னாவின் இந்தக் கருத்துகள் தற்போது திரையுலகில் கவனம் பெற்றுள்ளன.