சினிமா செய்திகள்

மதுரை மண்ணிற்கு நான் கடன் பட்டிருக்கிறேன்- நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

எனக்கு உறுதுணையாக இருக்கும் ரசிகர்களுக்கு நான் என்றுமே நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று கருப்பு பட இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

மதுரை,

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' படம் வருகிற மே மாதம் 14ந் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் திரிஷா, யோகிபாபு, இந்தி ரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, அனகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீடு மதுரையில் நடந்தது.

அதில் 'கருப்பு' படம் குறித்து சூர்யா கூறும்போது, "மதுரை மண் என் மனதுக்கு நிறைவான பூமி. இங்குள்ள உணவு, அரசியல் மற்றும் பெண்களை தெய்வமாக மதிக்கும் பண்பு ஆகியவை என்னை எப்போதும் ஈர்க்கின்றன. மதுரை மண்ணிற்கு நான் கடன் பட்டிருக்கிறேன். நிறைய திரைப்படங்களை நான் இங்கு தான் படமாக்கி இருக்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக என்னை ஒரு கதாநாயகனாக ஏற்றுக்கொண்டு, ரசிகர்கள் என் மீது பொழியும் இந்த அன்பிற்கும், பாசத்திற்கும் நான் பெரிதும் கடமைப்பட்டு போயிருக்கிறேன். எனக்கு உறுதுணையாக இருக்கும் ரசிகர்களுக்கு நான் என்றுமே நன்றியுள்ளவனாக இருப்பேன்.

இந்த படம் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பதற்கு கருப்ப சாமி தான் முக்கிய காரணம் என நான் கருதுகிறேன். ஒரு மனிதனுக்குள் தெய்வம் குடிகொள்ளும் போது ஏற்படும் தாக்கத்தை நான் இப்போது கண்கூடாக பார்க்கிறேன். எங்கு நம்பிக்கை இருக்கிறதோ, அங்கு நிச்சயமாக அற்புதங்கள் நிகழும்", என்றார்.