அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கவுதம் மேனன், அபிநயா, லட்சுமி பிரியா சந்திரமவுலி நடித்துள்ள 'கார்மேனி செல்வம்' படம் விரைவில் திரைக்கு வருகிறது.
சென்னையில் நடந்த பட விழாவில் கேட்கும், பேசும் திறனில் சவால் கொண்டவரான நடிகை அபிநயா சைகை மொழியில் பேசும்போது, “தளராத முயற்சி நிச்சய வெற்றியை தரும் என்று நம்புபவள் நான். அதனால் தான் இந்த பயணத்தில் தொடருகிறேன். அந்தவகையில் சினிமாவில் என்னை தேர்வு செய்து வாய்ப்பு கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்தப் படத்திலும் 'ஹோம்லி'யான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
சமுத்திரக்கனியுடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். ஆரம்பத்தில் கொஞ்சம் சீரியசாக இருந்தார். ஆனால் போகப்போக எங்களுடன் நல்ல இணக்கம் ஏற்பட்டது. நான் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க உந்துசக்தியாக இருக்கும் அனைவருக்கும் உண்மையாக இருப்பேன்", என்றார்.
சமுத்திரக்கனி பேசும்போது, "நல்ல மனிதர்களை பார்ப்பது அரிது. எனவே நல்ல படைப்புகளை உருவாக்கும் நல்ல மனிதர்களை பத்திரமாக பாதுகாப்பது என்பது நமது முக்கிய கடமை", என்றார்.