சினிமா செய்திகள்

பேய் படங்கள் என்றால் பயம்.. ஆனால் நல்ல கதை இருந்தால் நடிப்பேன் - நடிகர் யாஷ்

நடிகர் யாஷ் சமீபத்திய பேட்டியில் தனது திரைப்பட ரசனை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சென்னை,

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் நடித்துள்ள யாஷ் சமீபத்திய பேட்டியில், தனக்கு பேய் படங்களை பார்ப்பது பிடிக்காது என்றும், வலுவான ஹாரர் நடிக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

கே.ஜி.எப் மூலம் பான் இந்தியா நட்சத்திரம்

நடிகர் யாஷ், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'கே.ஜி.எப்' மற்றும் 'கே.ஜி.எப் 2' படங்களின் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான இந்த படங்கள் வசூலில் சாதனை படைத்து, யாஷுக்கு நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கின.

அடுத்தடுத்த படங்களில் பிஸி

தற்போது யாஷ், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் கேங்ஸ்டர் டிராமாவாக தயாராகி உள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணா படத்தில் ராவணனாக நடித்து வருகிறார்.

"பேய் படங்கள் பார்க்க விருப்பமில்லை"

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் யாஷ் தனது திரைப்பட ரசனை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "எனக்கு பேய் படங்களை பார்ப்பது பிடிக்காது. தியேட்டருக்கு சென்று பயப்பட நான் விரும்புவதில்லை. சில நேரங்களில் ஹாரர் படங்கள் பயத்தை விட வேடிக்கையாகவே தோன்றும். அதே நேரத்தில், வலுவான கதைக்களம் இருந்தால் ஹாரர் படங்களில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால், ஆக்ஷன் படங்கள்தான் என்னுடைய ஆல்-டைம் பேவரைட்" என்றும் யாஷ் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.