சினிமா செய்திகள்

‘ஜாலியா பேசலாம்னு வந்தேன், ஆனால்...’ - திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து நயன்தாரா நெகிழ்ச்சி

திரையரங்கில் ‘ஹாய்’ திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களை நடிகை நயன்தாரா சந்தித்து பேசினார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ஹாய்'. லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்கியுள்ளார். '7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' மற்றும் விக்னேஷ் சிவனின் 'ரவுடி பிக்சர்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு, பூர்ணிமா, காவ்யா அறிவுமணி, விடிவி கணேஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'ஹாய்' படத்தின் பாடல்கள் ( "கண்ணக்குழியா', 'ரசகுல்லா', 'பச்ச புள்ள', 'குடிகார நெஞ்சு') வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, விஷ்ணு எடவன் எழுதிய வரிகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடிய 'கண்ணக்குழியா' பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படம் கடந்த 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள திரையரங்கிற்கு சென்ற நடிகை நயன்தாரா, ‘ஹாய்’ திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகர்களை சந்தித்து பேசினார். ‘ஹாய்’ திரைப்படத்தை வெற்றி பெறச்செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “இங்கு வரும்போது ஜாலியாக பேசலாம் என்று வந்தேன். ஆனால் உங்களை எல்லாம் பார்த்ததில் ஒருமாதிரியாக எமோஷனலாக இருக்கிறது’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT