சென்னை,
தன்னை விட 10 வயது மூத்தவர்களுடன் ஏற்பட்ட நட்பினால், நடந்த சம்பவத்தை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என வார இதழ் ஒன்றுக்கு ஆர்ஜே பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.
ரேடியோ ஜாக்கி, நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்தவர் ஆர்ஜே பாலாஜி. குறிப்பாக, நகைச்சுவை கலந்த தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சூர்யாவுக்கு கம்பேக் படமாக அமைந்த இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. தற்போது புதிய திரைப்படங்களில் நடித்து வரும் ஆர்ஜே பாலாஜி, அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளையும் எழுதி வருகிறார்.
இந்த நிலையில், வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது சிறுவயதில் நடந்த மறக்க முடியாத சம்பவம் குறித்து ஆர்ஜே பாலாஜி பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், சிறுவயதில் தங்கள் குடும்பம் அடிக்கடி வீடு மாறினோன். அப்படி ஒருமுறை புதிய பகுதிக்கு சென்றபோது, தன்னைவிட சுமார் 10 வயது மூத்த சிலருடன் நட்பு ஏற்பட்டது என்றார்.
அந்த நண்பர்கள் ஒருமுறை தன்னை மது அருந்த அழைத்ததாகவும், அதனை முயற்சி செய்து பார்த்ததில் அது த்ரில்லாக இருந்ததாகவும் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றாக மோட்டார் சைக்கிள்களில் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். அப்போது திடீரென அந்த நபர்கள் முகத்தில் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு, சற்று இருட்டான பகுதியில் நடந்து சென்ற ஒரு பெண்ணின் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
அப்போது தனக்கு 15 வயது மட்டுமே என்றும், நடந்த சம்பவத்தை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்றும் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். சிறுவயதில் தன்னுடன் பழகியவர்கள் செய்த அந்த சம்பவம் தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அந்தச் சம்பவத்தை இன்றுவரை ஜீரணிக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.