சினிமா செய்திகள்

"சமூக வலைதளங்களில் ட்ரோல் ஆக விரும்பவில்லை"- நடிகர் தனுஷ் பேச்சு

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு நடிக்கும் ‘கர’ படம் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 30ந் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, எனக்கு தெலுங்கு சரளமாக வராது. ஏதாவது ஒரு வார்த்தையைத் தவறாகப் பேசி, பிறகு அனைவரிடமும் சமூக வலைதளங்களில் 'ட்ரோல்' ஆக எனக்கு விருப்பமில்லை. அதனால் எல்லோருக்கும் தெரிந்த மொழியிலேயே ஆங்கிலம் பேசுகிறேன். ரவிக்குமார் சார், நீங்கள் மேடையில் முழுமையாகத் தப்புத் தப்பான தெலுங்கில் பேசி சமாளித்துவிட்டீர்கள். உங்களுக்கு இருக்கும் அந்தத் துணிச்சல் உண்மையிலேயே எனக்கு இல்லை! என்றார்.