சினிமா செய்திகள்

பான் இந்திய நடிகராக உருவாக 'புஷ்பா' படம் எனக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை- நடிகர் பகத் பாசில்

'புஷ்பா' திரைப்படம் பான் இந்திய நடிகராக என்னை அடுத்த உயரத்திற்கு எடுத்து போய்விட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது என்று நடிகர் பகத் பாசில் கூறியிருக்கிறார்.

சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'புஷ்பா2: தி ரூல்'. இந்த மாதம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. இதன் முதல் பாகம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்தது. இரண்டாம் பாகமும் அதன் வெளியீட்டுக்கு முன்பே ஆடியோ, ஓடிடி, சாட்டிலைட் உரிமம் என லாபம் பார்த்துவிட்டதாக சொல்கிறார்கள். 

படத்தில் இருந்து வெளியான டீசர், 'புஷ்பா புஷ்பா' பாடல் என அனைத்துமே ரசிகர்களிடம் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் முதல் பாகத்தின் இறுதியில் நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்திருப்பார். இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தை விட அவரின் காட்சிகள் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது. முதல் பாகத்தைப் போலவே 'புஷ்பா2' திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது. 

இந்த நிலையில், 'புஷ்பா' திரைப்படம் குறித்து நடிகர் பகத் பாசிலிடம், "பான் இந்திய நடிகராக உங்களை உயர்த்திக் கொள்ள 'புஷ்பா' திரைப்படம் உதவியிருக்கிறதா?" என சேனல் பேட்டி ஒன்றில் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், "இல்லை" என்று சொன்னதுதான் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 

பகத் அந்தப் பேட்டியில், "இதுபற்றி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. நான் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். இயக்குநர் சுகுமாரிடமே இதுபற்றி நான் பேசியிருக்கிறேன். என்னுடைய பணியை 'புஷ்பா' படத்தில் குறைவாகச் சொல்லவில்லை.

இந்தப் படத்திற்குப் பிறகு ரசிகர்கள் என்னிடம் இருந்து மேஜிக் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். நிச்சயம் இல்லை. நான் அந்தப் படம் ஒத்துக்கொண்டதற்கு காரணம் சுகுமார் மேல் வைத்திருந்த அன்பு மட்டுமே. என்னுடைய கவனம் முழுவதும் மலையாள சினிமா மீது மட்டும்தான். அதனால், 'புஷ்பா' திரைப்படம் பான் இந்திய நடிகராக என்னை அடுத்த உயரத்திற்கு எடுத்து போய்விட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது" என்றார்.

SCROLL FOR NEXT