மும்பை,
ஹேராம் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் ராணி முகர்ஜி. இவர் நடித்த மர்தானி-2 என்ற இந்திப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ராணி முகர்ஜி நடித்து உள்ளார்.
மும்பையில் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சினிமாவுக்கு வந்த புதிதில் தவறாக நடந்துகொண்டவர்களிடம் இருந்து எப்படி உங்களை பாதுகாத்து கொண்டீர்கள் என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து ராணி முகர்ஜி கூறியதாவது:-
என்னிடம் தவறாக நடந்துகொண்டவர்களை கன்னத்தில் அறைந்தேன். நான் துர்கா தேவியை பார்த்து வளர்ந்தவள். எனவே குழந்தையாக இருந்தபோதில் இருந்தே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது அறைந்திருக்கிறேன். நான் பலரின் கன்னங்களை பழுக்க வைத்திருக்கிறேன். இதற்கான கணக்கு என்னிடம் இல்லை.
என்னை பொறுத்தவரை கற்பழிப்பு போன்ற காட்டு மிராண்டித்தனமான செயல்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்கள் தனது வாழ்க்கையை இழக்கும் அதே நேரத்தில், அவரது குடும்பத்தினர் இதனால் எதிர்கொள்ளும் அதிர்ச்சி மிகவும் கொடுமையானது. எனவே இத்தகைய குற்றவாளிகள் மிருகத்தனமான தண்டனைக்கு தகுதியானவர்கள். அவர்கள் மன்னிக்க தகுதியற்றவர்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.