சென்னை,
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் சித்தார்த், பாலிவுட்டில் தனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு தற்போது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.
மணிரத்னத்தின் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய சித்தார்த், பின்னர் 2003ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்த மூலம் நடிகராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். இவரது நடிப்பில் இந்தியில் வெளியான 'ரங் தே பசந்தி' படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், அதன்பிறகு பாலிவுட்டில் அவர் தொடர்ந்து நடிக்காதது குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் இருந்து வந்தன.
சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய சித்தார்த், "என்னிடம் வரும் படங்களுக்கு மட்டுமே நான் 'ஆம்' அல்லது 'இல்லை' என்று சொல்ல முடியும். ஆனால், பாலிவுட்டில் நான் செய்ய விரும்பும் மாதிரியான எந்த பட வாய்ப்பும் எனக்கு வரவில்லை. உண்மையில், இங்கு எனக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை," என்று கூறியுள்ளார்
தனக்கு பிடித்த கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்த சித்தார்த், நல்ல வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இந்தி படங்களில் நடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சித்தார்த்தின் வெளிப்படையான கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இவர் தற்போது ‘ஆபரேஷன் சஃபேத் சாகர்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சித்தார்த்துடன், ஜிம்மி ஷெர்கில், மிஹிர் அஹுஜா, அர்னவ் பாசின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் தொடர் வருகிற 7 ந் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ஓடிடியில் ஒளிபரப்பாக இருக்கிறது.