அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரேஷ்மா, சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்துள்ள 'டபுள் ஆக்குபன்சி' திரைப்படத்தை நடிகை குஷ்புவின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படைப்புத் தயாரிப்பாளராக குஷ்புவின் இளைய மகள் அவந்திகா பணியாற்றியுள்ளார்.
திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் நன்றி அறிவிப்பு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகை குஷ்புவும் கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் பேசிய குஷ்பு, "சில நாட்களாக நான் சரியாக தூங்கவில்லை. 'வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்' என்று பெரியவர்கள் சொல்வது சும்மா இல்லை என்பதை இப்போது உணர்கிறேன். என் மூத்த மகளின் திருமண வேலைகளில் மிகவும் பிசியாக இருக்கிறேன். அதே நேரத்தில், என் கணவர் சுந்தர்.சி தனது புதிய திரைப்படப் பணிகளையும், திருமண ஏற்பாடுகளையும் கவனித்து வருகிறார்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "என் இளைய மகள் அவந்திகா 'டபுள் ஆக்குபன்சி' படத்திற்காக மிகச் சிறப்பாக உழைத்துள்ளார். நான் அவரை எப்போதும் 'பொம்மை' என்றுதான் அழைப்பேன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு சிறிய திரைப்படம் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
சுந்தர்.சி எப்போதும் ஒரு விஷயத்தை சொல்வார். நாம் தயாரிக்கும் திரைப்படங்கள் மக்களை மகிழ்விக்க வேண்டும். ரசிகர்கள் செலவழிக்கும் பணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் படங்கள் இருக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம். அந்தக் கொள்கையை நாங்களும் தொடர்ந்து கடைப்பிடிப்போம்," என்று தெரிவித்தார்.