சென்னை,
தமிழ் சினிமாவில் ‘கோமாளி’, ‘வாட்ச்மேன்’, ‘தேர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. கன்னட திரையுலகில் அறிமுகமான அவர், பின்னர் தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே, தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பயண அனுபவங்கள் குறித்து அவ்வப்போது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது புதிய வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியிருந்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறுகையில், “கடந்த ஆண்டு இறுதியில் நான் மும்பைக்கு குடிபெயர்ந்தேன். நான் எப்போதும் கனவு கண்ட வாழ்க்கையை தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன். மும்பை எனக்கு புதிய வேலை வாய்ப்புகளின் கதவுகளை திறந்துவிட்டது. அங்கு நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறேன்.
நான் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவள். மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன். நேர்மை மற்றும் விசுவாசத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் அளிப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை சம்யுக்தா ஹெக்டே தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
கடற்கரை, கடல்சார் விளையாட்டுகள் மற்றும் இயற்கை எழில் நிறைந்த இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுகளையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
சம்யுக்தா ஹெக்டே பகிர்ந்துள்ள மாலத்தீவு பயண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.