கல்லூரியில் படித்த காலத்தில் தாழ்வு மனப்பான்மையில் தவித்ததாக நடிகர் யாஷ் கூறியுள்ளார்.
‘கே.ஜி.எப்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ள யாஷ், தற்போது ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கேங்ஸ்டர் டிராமா திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1940 முதல் 1970-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஆக்ஷன் மற்றும் திரில்லர் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
‘டாக்ஸிக்’ டீசர் மற்றும் டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. குறிப்பாக, சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களில் அதுகுறித்து விவாதங்கள் எழுந்தன. அதேநேரத்தில், டீசர் மற்றும் டிரெய்லர் அதிக பார்வைகளைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளன.
ரத்தம் தெறிக்கும் வகையிலான வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், ‘டாக்ஸிக்’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், இப்படம் சுமார் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உருவாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நேற்று ஐதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழக வளாகத்தில் ‘டாக்ஸிக்’ படத்தின் பிரமாண்ட விழா நடைபெற்றது . இதில் யாஷ் , கியாரா அத்வானி உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
ஐதராபாத்தில் நடந்த ‘டாக்ஸிக்’ பட நிகழ்ச்சியில் ஸ்பீக்கர் விழுந்து விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெறவிருந்த “டாக்ஸிக்” பட நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை (ஆகஸ்ட் 24) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘டாக்ஸிக்’ படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் யாஷ் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், “பள்ளிப் பருவம் வரை பணம், அந்தஸ்து பற்றிய எந்த உணர்வும் எனக்கு இருந்ததில்லை. ஆனால் கல்லூரிக்குச் செல்லத் தொடங்கியதும், என்னுடைய குடும்ப பொருளாதார நிலைக்கும், மற்ற மாணவர்களின் பொருளாதார நிலைக்கும் இடையிலான வித்தியாசத்தை என்னால் உணரமுடிந்தது. குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த சிறிய அளவிலான மளிகைக் கடையை நடத்தினோம். அந்தக் கடைக்கு தேவையான பொருட்களை வாங்கவும், கல்லூரிக்கு செல்லவும், நான் அப்பாவின் பழைய ஸ்கூட்டரைத்தான் பயன்படுத்தினேன். ஆனால் ஆடைகள் அணிவதிலும் சரி. உயர்ரக வாகனங்களை வைத்திருப்பதிலும் சரி, மற்ற மாணவர்கள் மேம்பட்ட வர்களாக இருந்தனர். அதனால் எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை தோன்றும். யாரும் என்னைப் இப்படிப் பார்க்கக்கூடாது என்று நினைப்பேன். என்னுடைய பெற்றோரால் எனக்காக சொத்துகளை சேர்க்க முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் என் வாழ்க்கைக்கான அனுபவங்களையும், அசைக்க முடியாத ஆதரவையும் எனக்கு வழங்கினார்கள். அவர்களின் தியாகங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.