சினிமா செய்திகள்

'எனக்கு உரிய நீதி வேண்டும்'...பவன் கல்யாண், ரேவந்த் ரெட்டியிடம் நடிகர் மோகன் பாபு மகன் கோரிக்கை

சொத்து தகராறு காரணமாக நடிகர் மோகன்பாபுவுக்கும் அவரது மகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு. இவரது மகன் மஞ்சு மனோஜ். சமீபத்தில் நடிகர் மோகன் பாபு, மகன் மனோஜ் தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடந்து வரும்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு மோகன் பாபு தன்னை தாக்கியதாக காயங்களுடன் ஐதராபாத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று மனோஜ் புகார் அளித்திருக்கிறார்.

சொத்து தகராறு காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அது முற்றி கைகலப்பான நிலையில், மனோஜ் காயம் அடைந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். சொத்து விஷயத்தில் தந்தையும், மகனும் மாறி மாறி குற்றச்சாட்டு கூறுவதால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக மஞ்சு மனோஜ் தனது சமூகவலைதளப்பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளார். அதில், வெளிப்படையான மற்றும் நேர்மையான விசாரணை மூலம் தனக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்று தெலுங்கானா முதல்- மந்திரி ரேவந்த் ரெட்டி, ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் உள்ளிட்டோரை குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT