சினிமா செய்திகள்

“ஏ.ஆர். ரகுமானை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்” - நடிகை மோகினி பகிர்ந்த சுவாரஸ்ய நினைவு

நடிகை மோகினி ஏ.ஆர்.ரகுமான் குறித்து பகிர்ந்துள்ள கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் மோகினி. 1987-ஆம் ஆண்டு தமிழில் வெளியான கூட்டுப் புழுக்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து ஈரமான ரோஜாவே, சின்ன மருமகள், உடன் பிறப்பு, கண்மணி, ஜமீன் கோட்டை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை மோகினி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குறித்து பகிர்ந்துள்ள கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: “நான் ஏ.ஆர். ரஹ்மானின் தீவிர ரசிகை. அது சாதாரண விருப்பம் அல்ல, வெறித்தனமான அன்பு என்றே சொல்லலாம். அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியது எனக்கு பெரிய மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அப்போது நான் இந்துவாக இருந்தேன். ‘திலீப்’ என்ற பெயரே எனக்கு போதுமானதாக இருந்தது; மதம் மாறியிருக்க வேண்டாம் என நினைத்தேன். வீட்டில் ‘எனக்கு அவர் பிடித்திருக்கிறார், திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று சொல்லுவதற்கு வசதியாக இருந்திருக்கும். சண்டை சச்சரவுகள் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என மனதில் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவர் என்னைவிட மிகவும் இளையவர் என்பதும் எனக்குத் தெரியும்,” என்று தெரிவித்துள்ளார்.

நடிகை மோகினியின் இந்த வெளிப்படையான கருத்து ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.