‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ரம்யா ரங்கநாதன். தொடர்ந்து மீசைய முறுக்கு-2, ஜமா, பாரி இளவழகனின் அன்பே டயானா போன்ற படங்களில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் மீசைய முறுக்கு படத்தின் தீவிர ரசிகை. படத்தில் இடம் பெற்ற வாடிபுள்ள வாடி பாடல் ஒலித்த போது நான் அழுதுவிட்டேன். இப்போது அதன் 2-ம் பாகத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் உற்சாகமாக இருக்கிறேன். மீசைய முறுக்கு-2 படத்தில் தமிழ் பெண்ணாகவும், அன்பே டயானா படத்தில் ஆங்கிலோ இந்திய பெண்ணாகவும் நடிக்கிறேன். 2 கதாபாத்திரங்களும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை போல் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நான் நடிக்க விரும்பவில்லை. ஒரு கலைஞரான எனக்கு அதிக மதிப்பை தரும் படங்களையே நான் தேர்ந்தெடுக்கிறேன்.
அன்பே டயானா படத்தின் கதாபாத்திரத்திற்காக பெரம்பூரை சேர்ந்த ஆங்கிலோ இந்தியர்களுடன் கலந்துரையாடி அவர்களின் உடல்மொழியை தெரிந்து கொண்டேன். நான் சென்னையை சேர்ந்தவளாக இருந்தாலும் பெரம்பூரை பார்த்ததில்லை. அது எனக்கு கிட்டதட்ட முற்றிலும் வேறொரு நகரம் போலவே இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.