நடிகர் அதர்வா ‘இதயம் முரளி’ திரைப்படம் தன் தந்தைக்காக கொடுத்த மரியாதை என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகரான அதர்வா 'பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'பராசக்தி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்த ‘இதயம் முரளி’ திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் நாயகனாக நடிகர் அதர்வாவும் நாயகிகளாக பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் அதர்வாவுடன் இணைந்து நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
காதல், நகைச்சுவை, எமோஷனல் காட்சிகளால் இப்படத்தின் கதை உருவாகியிருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இப்படத்திற்கு டிக்கெட் விற்பனைகள் கணிசமாக அளவில் விற்பனையாகி வருகிறது. இதனால், இப்படம் இதுவரை ரூ. 15 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் அதர்வா, “என் அப்பா முரளிக்கு ஏதாவது ஒரு வகையில் சமர்ப்பணம் செய்ய வேண்டுமென நினைத்திருந்தேன். அப்போதுதான் ஆகாஷ் பாஸ்கரன் வந்தார். ஒரு நல்ல நண்பராக அவரே இதனைச் செய்து முடித்துவிட்டார். என் அப்பா முரளிக்கு மரியாதை செலுத்து விதமாகவும் படம் அழகாக அமைந்துவிட்டது. இப்படத்தில் நடிகர் சின்னி ஜெயந்த் பேசிய வசனங்களும் பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாடலும் என் கண்களைக் குளமாக்கிவிட்டன” என தெரிவித்துள்ளார்.
நடிகர் அதர்வாவின் அப்பாவான முரளி ‘இதயம்’ படத்தில் நடித்து பிரபலமானார். முரளிக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைப்போல் அதர்வாவிற்கும் ‘இதயம் முரளி’ திரைப்படம் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.