தனுஷ் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் குறித்து அவரது தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2024-ம் ஆண்டு சென்சார் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது. இது குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குநராக தனக்கு கிடைத்துள்ள முதல் தேசிய விருது தனது வாழ்நாளில் மறக்க முடியாத ஆசீர்வாதம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் தனுஷிற்கு விருது கொடுக்கப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக வதந்தி எழுந்தது.
இதையடுத்து நடிகர் தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் “நடிகர் தனுஷிற்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது மகிழ்ச்சிதான், அவர் பயணம் பண்ணுகிற வழி, அவருடைய முயற்சிகள், அனைத்துமே அப்படியே இருக்கிறது. அதனால் அவருக்கு விருது கிடைத்திருக்கிறது. மற்றபடி அதில் அரசியல் நிலைப்பாடு என எதுவும் இல்லை. அரசு குழு (ஜூரி) எடுக்கும் முடிவுகளில் தான், தேசிய விருது கிடைக்கிறது. இந்த முறை என் மகனுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. மிகவும் பெருமையான விஷயம்.
தனுஷை விட பெரிய நடிகர்கள் தமிழ்நாட்டில் இல்லையா, அவர்கள் ஏன் குழுவை அதிகாரம் செலுத்தி தேசிய விருதுகள் வாங்கவில்லை. இது அரசு மற்றும் தேர்வுக் குழு எடுக்கும் முடிவுதான் என நான் நினைக்கிறேன். நான்கு பேரை பார்த்து பேசி, ஐயா எனக்கு விருது கொடுங்க என்றும் சொல்லும் அளவிற்கு, தனுஷிற்கு அவ்வளவு பெரிய புத்திசாலித்தனம் எல்லாம் கிடையாது.
இதற்கு முன்னதாக அசுரன் மற்றும் ஆடுகளம் படத்திற்காக அவருக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் விருதுகளுக்காக ஏங்குபவர் கிடையாது
தனுஷ் அழைத்தால் படத்தில் நடிக்க போவேன். ஆனால் செல்வராகவன் நடிக்க கூப்பிட்டால் போக மாட்டேன். அவருடன் நடிப்பது கடினம். தனுஷ் கட்சி ஆரம்பித்தால் ஆரம்பித்து விட்டு போகட்டும் இல்லை என்றால் இருக்கட்டும். அதைப்பற்றி எதுவும் கேட்டுக்கொள்ள மாட்டோம்.” என்றார்.
சமீபத்தில் தனுஷ் போட்டோ இடம்பெற்றிருந்த ரசிகர் மன்றக் கொடியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்தக் கொடியில் இடம்பெற்றிருந்த "எண்ணம்போல் தான் வாழ்க்கை" என்ற வாசகத்தைத் தொடர்ந்து, தனுஷ் தனது ரசிகர் மன்றத்திற்கு புதிய கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார் என்றும், இது அவரது அரசியல் வருகைக்கான முன்னோட்டம் என்றும் தகவல்கள் பரவின. தனுஷ் ரசிகர் மன்றக் கொடி தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு சுப்பிரமணிய சிவா முற்றுப்புள்ளி வைத்தார்.