சினிமா செய்திகள்

பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா

பாடகி ஜானகி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

என்னைவிட கடினமான உழைப்பாளி ஜானகியம்மா என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகி வயது முதிர்வு காரணமாக மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88. இந்தியத் திரையிசையில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்தவர். 4 தேசிய விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர் பாடகி எஸ்.ஜானகி. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும்,ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜானகியம்மா காலமான செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தேன், அதிர்ச்சியாக இருந்தது. தன் சொந்த வாழ்வில் தாங்க முடியாத துயரங்களைத் தாங்கி வாழ்ந்து வந்தவர் ஜானகியம்மா. உலக மேதைகள் பலரின் வாழ்வும் துக்கமாகவே இருந்திருக்கிறது. திறமையில் தான் யாருக்கும் சளைத்தவர் இல்லை என நிரூபித்தவர். நான் எப்படி கடினமான உழைப்பாளியோ அதைவிட மேலான உழைப்பாளி ஜானகியம்மா. அவரது மறைவு இந்திய சங்கீத உலகிற்குப் பெரிய இழப்பு. ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.