சென்னை,
மீசையை முறுக்கு படத்தின் கதாநாயகி ஆத்மிகா, கோவையைச் சேர்ந்த தமிழ் பெண். பொதுவாகவே தமிழ் பெண்கள் சினிமாவில் ஜெயிப்பது அபூர்வம் என்று சொல்வார்கள். நீங்கள் எப்படி? என்று அவரிடம் கேட்டோம். ஆத்மிகா உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன், என்ஜினீயரிங் படித்துக் கொண்டிருந்தேன். கேம்பசில் தேர்வு பெற்று, பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில், என்ஜினீயராக சில மாதங்கள் வேலை செய்தேன். அப்போது எனக்கான இடம் சினிமாதான் என்று முடிவு செய்தேன். என் நடிப்பில் ஒரே ஒரு படம்தான் திரைக்கு வந்திருக்கிறது. இப்போது, நரகாசுரன், உதயநிதியுடன் கண்ணை நம்பாதே, காட்டேரி, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம், யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு படம் என சில படங்களில் நடித்து வருகிறேன்.
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை. நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க விருப்பமாக இருக்கிறேன். சினிமாவில், ஒரு தமிழ் பெண்ணாக என்னால் ஜெயித்துக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்கிறார், ஆத்மிகா.